ஜோதிட சாஸ்திரம்
விண்வெளியில் ஒளிர்விடும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை, பண்டைய காலத்திலிருந்தே, மனிதனை ஈர்த்து வந்துள்ளன. அவனுடைய ஆவலையும் தூண்டி வந்துள்ளன. இவற்றைப் பலகாலம் கண்டு மகிழ்ந்த அவன், பின்னர், இவற்றின் அமைப்பு, இயக்கம் போன்றவற்றை கவனிக்கத் தொடங்கினான். தவறாமல், தொடர்ந்து இவற்றைக் கூர்ந்து நோக்கி வந்த அவன், பின்னர், இவற்றுடன், மண்ணுலகில் மனிதன் வாழும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கினான். பல்லாண்டு காலம் தொடர்ந்த இந்த விடா முயற்சியின் பயனாக, இது போன்ற விண்வெளி வாசிகள், மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதைக் கண்டு கொண்டான். இது போன்ற நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவற்றின் அமைப்பு, இயக்கம் ஆகியவை குறித்து முழுமையாகக் கற்று, அறிந்து கொள்வதன் முலம், மனிதர்களின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொண்டான்.
பல்லாண்டுகால, இந்த அநுபவ அறிவின் விளைவாக உருவானது தான் ஜோதிடம் எனப்படும் பண்டைய விஞ்ஞானம் அல்லது சாஸ்திரம் ஆகும்.
ஜாதகம்
கடல் போல் விரிந்து, பரந்துள்ள இந்த ஜோதிடக் கலை, குறிப்பாக, நட்சத்திரம், கிரகம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாற்றுகிறது. ஒருவர் பிறக்கும் நாளிலும், நேரத்திலும், இடத்திலும், உள்ள விண்வெளியின் அமைப்பு, அப்பொழுது அமைந்துள்ள கிரகங்களின் நிலை ஆகியவையே அவரது இயல்பு, வாழ்க்கை, எதிர்காலம், அதிர்ஷ்டம், இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் போன்ற அனைத்தையும் நிர்ணயிக்கின்றன; எனவே, இவற்றை ஆராய்ந்து அறிவதன் மூலம், அவர் வாழ்க்கை, எதிர்காலம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும், என்று உணர்ந்த நம் முன்னோர்கள், ஒருவர் பிறக்கும் நேர கிரக அமைப்பை, விசேஷமான ஒரு விளக்கப்படமாகக் குறித்து வைத்தனர். இதுவே ஜாதகம் எனப்படுகிறது.
இந்த ஜாதகம் என்பது, 12 ராசிகளைக் குறிக்கும் 12 கட்டங்களுடன் கூடிய அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட நபர் பிறக்கும் நேரத்தில் வானத்தில் கிரகங்கள் எவ்வாறு அமைந்துள்ளனவோ, அதன் அடிப்படையில், ஜாதகத்தில் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு கிரகங்கள் குறிக்கப்படுகின்றன.
இவ்வாறு எழுதப்படும் ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்தே, அவருடைய எதிர்காலம் கணிக்கப் படுகிறது. வாழ்க்கைப் பலன்கள் அறிந்து, சொல்லப்படுகின்றன.
நட்சத்திரங்கள்
விண்வெளியில் எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் அமைந்திருந்தாலும், நமது பண்டைய வேத ஜோதிடம் கணக்கில் கொள்வது, 27 நட்சத்திரங்கள் ஆகும். நம் பூமியிலிருந்து பெரும் தொலைவில் உள்ள இவை, சுயமாக ஒளிவிடும் ஆற்றலுடன், மிகப் பிரகாசமாக ஒளிர்கின்றன.
இந்த 27 நட்சத்திரங்கள் கீழ்க்கண்டவை ஆகும் – அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
விண்வெளியில் உலா வந்து கொண்டிருக்கும் சந்திரன், இந்த ஒவ்வொறு நட்சத்திரத்திலும், அடுத்தடுத்து, தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஒருவர் பிறக்கும் நேரத்தில், எந்த நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்கிறாரோ, அது அவரது ஜன்ம நட்சத்திரம் ஆகிறது. ஒருவரது ஜன்ம நட்சத்திரம், அவரது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நட்சத்திர அதிபதிகள்
இந்த 27 நட்சத்திரங்களைப் போல, வேத ஜோதிடத்தில் 9 கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை – சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் அல்லது குரு, வெள்ளி, சனி, ராகு, மற்றும் கேது ஆகும்.
இந்த 9 நவகிரகங்கள், 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன எனலாம். அதாவது, இந்த 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்களின் அதிபதிகளாக விளங்குகின்றன. இவ்வாறு, 1 கிரகம், 3 நட்சத்திங்களின் அதிபதியாக விளங்குகிறது.
இந்த நட்சத்திர அதிபதிகள் அல்லது அதிபதி கிரகங்கள், இவ்வாறாகத் திகழ்கின்றன:
நட்சத்திரம் அதிபதி கிரகம்
அஸ்வினி, மகம், மூலம் கேது
பரணி, பூரம், பூராடம் சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் சந்திரன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குரு (வியாழன்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன்
நட்சத்திர அதிபதிகளின் சிறப்பியல்புகள்
நட்சத்திர அதிபதிகளான, இந்த 9 கிரகங்களில், புதன், குரு, வெள்ளி ஆகியவை சுப கிரகங்கள் எனவும், சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை அசுப கிரகங்கள் எனவும் கருதப்படுகின்றன. சந்திரன், வளர்பிறையில் சுபமாகவும், தேய்பிறையில் அசுபமாகவும் விளங்குகிறார்.
இந்த 9 கிரகங்களில், ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு உருவம் கிடையாது. எனவே அவை சாயா கிரகங்கள், அதாவது, நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த நட்சத்திர அதிபதிகளான கிரகங்களில் - சூரியன் பித்ரு காரகன் எனப்படுகிறார்; தந்தை, தந்தை வழி முன்னோர்கள், அதிகாரப் பதவி, பெயர், புகழ் போன்றவற்றைக் குறிக்கிறார். மனோ காரகன் எனப்படும் சந்திரன், மனம், உணர்வுகள், பரிவு, தாய், தண்ணீர் ஆகியவற்றைக் குறிக்கிறார். நிலம், கணவன், சகோதரர்கள், துணிவு, கோபம், காவல் துறை, ராணுவம் போன்றவற்றைக் குறிக்கும் செவ்வாய், பூமி காரகன் எனப்படுகிறார். புத்தி காரகனான புதன், அறிவாற்றல், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் திறன், எழுத்து போன்றவற்றைக் குறிக்கிறார்.
தன மற்றும் புத்ர காரகன் எனப்படும் குரு, செல்வம், குழந்தைகள், மேல் படிப்பு, ஆன்மிகம், ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறார். அன்பு, காதல், திருமணம், மண வாழ்க்கை, அழகு, பெண்கள் ஆகியவற்றைக் குறிக்கும் சுக்கிரன், களத்ர காரகன் எனப்படுகிறார். ஜீவன மற்றும் ஆயுள் காரகனான சனி, வேலை, தொழில், கடின உழைப்பு, தண்டனை, சிறை, தோல் வியாதிகள் ஆகியவற்றைக் குறிக்கிறார். மேலும், போக காரகனான ராகு, பொருள் வசதிகள், இருள், தடைகள், தோல்விகள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் போன்றவற்றையும்; ஞான காரகனான கேது, பற்றற்ற நிலை, துறவு, சண்டை சச்சரவுகள், சட்டச் சிக்கல்கள் போன்றவற்றையும் குறிக்கின்றனர்.

Comments
Post a Comment